இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் பப்புவா மற்றும் நியூ கினியா பகுதியில் உள்ள மனோக்வாரியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்து ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளன. ரான்சிங்கி என்ற பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பள்ளிக்கட்டடம் ஒன்று ஆடியதால் குழந்தைகள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேற்கு பப்புவா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்த பகுதி ஹோட்டல்களில் தங்கியிருந்த ஏராளமான வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
முந்தைய நிலநடுக்கங்களோடு ஒப்பிடுகையில் இது குறைந்த அளவிலானது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த வாரம்தான் இந்தோனியாவின் சுமத்ராவுக்கு அருகே 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு உலகையே பீதிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம்.
Social Plugin