Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்: பிரதமருக்கு அப்துல்கலாம் கடிதம்!!



கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராடி வருவதால் அணுமின் நிலையம் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டியது அவசியமாகிறது. திறப்பதை தாமதப்படுத்தினால் நாடு முழுவதும் அணுஉலை எதிர்ப்பு கருத்துக்களுக்கு அது சாதமாக அமைந்து விடும். இதற்கு இடம் அளிக்க கூடாது. எனவே விரைவிலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும். அதே நேரத்தில் அணுசக்தி திட்டங்கள் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் பிரசாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர் பாக அடிப்படை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய தீர்வு காண வேண்டும். இதன்மூலம் 2030-ம் ஆண்டில் நாம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் திட்டத்தின் இலக்கை அடைய வேண்டும். அதே நேரத்தில் கூடங்குளம் பிரச்சினையை தமிழ்நாடு முதல்- அமைச்சரிடம் கொண்டு சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க முழு ஒத்துழைப்பை பெற வேண்டும். கூடங்குளம் பகுதியை முன்னேற்றுவதற்காக நான் கொடுத்த 10 அம்ச திட்டங்களை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அணுசக்தி மின்கழகம் ரூ.200 கோடி திட்டங்களை அந்த பகுதி வளர்ச்சிக்காக வழங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களக்கு உரிய பயிற்சிகளை அளித்து கூடங்குளம் அணுமின் நிலையத்திலும், இதுதொடர்பான தொழிலகத்திலும் வேலை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய உயர் கல்விகளையும் அளிக்க வேண்டும். அணுமின் நிலையத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் 2-ல் இருந்து 5 சதவீதத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும். அணுமின் நிலையத்தால் பாதித்த மக்களுக்கு அதற்கான நிவாரணத்தை வேகமாக வழங்க வேண்டும். தேவையான மறுவாழ்வு திட்டங்களையும் உருவாக்கி கொடுக்க வேண்டும். 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் செலவிடப்படாமல் உள்ள பணத்தின் ஒரு பகுதியை தமிழகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது மின்தட்டுப்பாடு இருப்ப தால் கூடங்குளம் முதல் அணு உலையில் உற்பத்தி யாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத் திற்கே ஒதுக்க வேண்டும். 2-வது அணுஉலை செயல்படும் போது மற்ற மாநிலத்திற்கும் பகிர்ந்து கொடுத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக விஞ்ஞானியும் அப்துல்கலாமின் ஆலோசராகவும் இருக்கும் பொன்ராஜ் கூறியதாவது:-
அப்துல்கலாம் அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் கூறிய ஆலோசனைகளை ஏற்பதாகவும் இதை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி கூறியிருக்கிறார். 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.16 ஆயிரம் கோடி செலவிடப்படாமல் உள்ளது. அவற்றின் ஒரு பகுதியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கினால் பல்வேறு வளர்ச்சிகளுக்கு அது உதவுவதாக அமையும்.