Hot Posts

6/recent/ticker-posts

தமிழர்கள் நிலை அறிய ஏப்.16-ல் இலங்கை செல்கிறது சுஷ்மா குழு!!


இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிவதற்காக, சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு, அடுத்த மாதம் கொழும்பு பயணம் மேற்கொள்கிறது. 

இதுகுறித்து  பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16-ம் தேதி புறப்பட்டு செல்கிறார்கள். 21-ம் தேதி திரும்புகிறோம். 

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கிறோம்.

பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை உறுப்பினர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுகிறார்கள். 

எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் செய்து வருகிறார்," என்றார் சுஷ்மா ஸ்வராஜ். 

முன்னதாக, இலங்கையில் தமிழர் நிலையைக் கண்டறிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பும் யோசனையை கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது பிஜேபி மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். 

இதனை ஏற்று மத்திய அரசு, கடந்த பிப்ரவரி 11ம் தேதி அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கை அனுப்புவதாக இருந்தது. 

ஆனால், உத்தரப் பிரதேசம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.