Hot Posts

6/recent/ticker-posts

ஐ.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை!!

5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், தர்மசாலா, புனே, விசாகப்பட்டணம், மொகாலி, கட்டாக் ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டம் நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் 7 லீக் ஆட்டமும், தகுதி சுற்று (2) ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (25-ந்தேதி) தொடங்குகிறது. காலை 11.30 மணி முதல் 5.30 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். 26-ந்தேதியும் டிக்கெட் விற்பனை நடைபெறும். காலை 9 மணி முதல் 5.30 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளைக்காக டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.

இந்தப் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.700 ஆகும். இது ஏ,பி,சி ஸ்டாண்டுகளின் கீழ்பகுதி ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.15,000 (பாக்ஸ் டி) ஆகும். ரூ.1,200 (ஏ.பி.சி மேல் பகுதி), ரூ.3,000 (டி3, எம்.சி.சி), ரூ.5,000 (பெவிலியன் டெரஸ்), ரூ.7,000 (அண்ணா பெவிலியன்), ரூ.8 ஆயிரம் (ஏ மற்றும் பி பாக்ஸ்) ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்கப்படும். www.chennaisuperkings.com என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா ஏப்ரல் 3-ந்தேதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.