Hot Posts

6/recent/ticker-posts

குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா?... கருணாநிதி விளக்கம்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் இன்று கருணாநிதியை சந்தித்தனர். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருக்கிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்குத் தெரியாது என்றார் கருணாநிதி.

கலாம் என்ற வார்த்தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி நீங்கள் கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சில பேர், அதை திசை திருப்ப முயலுகிறார்கள். அப்துல் கலாம் வகித்த உயர்ந்த பதவி மீதும், அவர் மீதும் நான் வைத்துள்ள மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவரே அறிவார். அவரை எப்போதும் மதிக்கக் கூடியவன் நான் என்றார் கருணாநிதி.

பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது, பிரகாசமாக உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வரும் 30ஆம் தேதியன்று சென்னைக்கு முதன் முதலாக வாக்காளர்களைச் சந்திப்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வாக்குகளைக் கேட்பார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பதோடு, விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என்றார் கருணாநிதி.