Hot Posts

6/recent/ticker-posts

வடமாநிலத்தவர் சென்ட்ரலில் குவிந்தனர்: மேலும் 2 ஆயிரம் பேர் சிறப்பு ரெயிலில் சென்றனர்!!


வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக சென்னையிலும் வதந்தி பரவியதில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்தவர் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.
 
பெங்களூரில் பரவிய வதந்தி சென்னையிலும் பரவி வருவதால் இங்குள்ள வட கிழக்கு மாநில மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இங்குள்ள இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
வியாழக்கிழமை இரவு தொடங்கி இன்று 3-வது நாளாக பதட்டம் நிலவி வருகிறது. வடகிழக்கு மாநில மக்கள் பயப்பட வேண்டாம். பீதி அடைய வேண்டாம், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக முதல்-அமைச்சர் உறுதியளித்தார். ஆனாலும் நேற்று இரவும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் கூடியது. அவர்களை போலீசார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை.
 
அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் குறியாக இருந்தனர். இதனால் ரெயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். பெங்களூரில் இருந்து சென்ட்ரல் வழியாக கவுகாத்திக்கு 4 சிறப்பு ரெயில்கள் நேற்று இரவு இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் சென்ட்ரல் வந்தபோது நிரம்பி வழிந்தது. சுமார் 4 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். சென்னையில் உள்ள வடமாநிலத்தவரை ஏற்ற முடியாததால் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
 
அதில் 8 ரெயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஒவ்வொரு ரெயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு சென்னையைச் சேர்ந்த வடகிழக்கு மாநிலத்தவர்களை ஏற்றினார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் அதிகாலை 2 மணிக்கு ஒரு ரெயிலும் காலை 6.30 மணிக்கு மற்றொரு ரெயிலும் இதைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு இன்னொரு சிறப்பு ரெயிலும் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றன.
 
இந்த 4 ரெயில்களிலும் சென்னையைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். நேற்று காலை 2 ஆயிரம் பேரும் நேற்று முன்தினம் இரவு 1,500 பேரும் சென்னையில் இருந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கிடையில் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்த வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு போலீஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
 
சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் காவல் உதவி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் 
98402 95100, 96770 66100, 97890 88100 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் நிலையத்திற்கு இன்று மிக குறைந்த அளவில்தான் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வந்து இருந்தனர்.
 
ஆனாலும் அந்த எண்ணிக்கை அதிகமாக கூடுமானால் சிறப்பு ரெயிலோ, அல்லது கூடுதல் பெட்டியோ இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.