Hot Posts

6/recent/ticker-posts

சங்கரன்கோவிலில் 144 வாபஸ்:விடிய, விடிய போலீஸ் ரோந்து!!

  
சங்கரன்கோவில் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் காமராஜர் நகர் தைமாத கோயில் கொடைவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கழுகுமலை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். 

அங்குள்ள பெரிய பள்ளி வாசல் அருகே வந்தபோது சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கடைகள், கார், லாரி, ஆட்டோ, பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. கலவரத்தை அடக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

நேற்று தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில், நெல்லை சரக டிஐஜி வரதராஜூ, எஸ்பி விஜயேந்ததிர பிதரி, ஏடிஎஸ்பி மகேந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் கலவரத் தடுப்பு வாகனங்களுடன் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  1200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நேற்று எஸ்.பி. தலைமையில் 200 போலீசார் காந்தி நகர் பகுதியில் உள்ள தெருக்கள், முஸ்லிம்கள் வசித்துவரும் தெருக்கள் மற்றும் காயிதேமில்லத் பெயரில் உள்ள 5 தெருக்களில் அணிவகுப்பு நடத்தினர்.

100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டன. தற்போது அந்த பகுதியில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பி உள்ளது. இதனால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையில் கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் அனைவரையும் சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர்  பாளை சிறையில் அடைத்தனர்.