Hot Posts

6/recent/ticker-posts

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையின் முதல் பெண் எம்.எல்.ஏ முத்துச்செல்வி!!

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ள சங்கரன்கோவில் தனி தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ, முதல் அதிமுக பெண் எம்எல்ஏ என்ற பெயரை முத்துச்செல்வி பெற்றுள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதிக்கு முதலில் 1952ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது அது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. முதல் தேர்தலில் ராமசுந்தர கருணாலய பாண்டியன் மற்றும் ஊர்க்காவலன் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பாண்டியன் சுயேச்சையாவார். ஊர்க்காவலன் காங்கிரஸ்காரர்.

பின்னர் 1957ல் சுப்பையா முதலியார் மற்றும் ஊர்க்காவலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் காங்கிரஸ்காரர்கள்.

பின்னர் 1962ம் ஆண்டு இத்தொகுதி ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அப்துல் மஜீத் சாஹிப் வெற்றி பெற்றார்.

1967ல் நடந்த தேர்தலில் திமுகவின் துரைராஜ் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அல்லாத கட்சியின் முதல் உறுப்பினர் என்ற பெருமை துரைராஜுக்கு உண்டு.

தொடர்ந்து 1971 மற்றும் 77 ஆகிய ஆண்டுகளிலும் திமுகவே வென்றது. அப்போது அக்கட்சியின் சார்பில் சுப்பையா வெற்றி பெற்றார்.

பின்னர் காட்சி மாறியது. 1980ல் அதிமுக முதல் முறையாக வெற்றிக்கனியைப் பறித்தது. முன்பு திமுக சார்பில் வென்றவரான துரைராஜ், இம்முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். 1984ல் அதிமுகவின் சங்கரலிங்கம் வென்றார்.

1989ம் ஆண்டு நடந்த தேர்தலி்ல திமுக தொகுதியைப் பறித்தது. தங்கவேலு வெற்றி பெற்றார். இந்த தேர்தல்தான் கடைசியாக திமுக இங்கு வென்றதாகும். அதன் பிறகு இன்று வரை அதிமுகதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

1991ல் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 1996 முதல் இந்தத் தொகுதி கருப்பசாமி கைக்கு மாறியது. 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அடுத்தடுத்து கருப்பசாமியே வெற்றி பெற்று வந்தார்.

இப்போது 2012ல் நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்று இத்தொகுதி தனது கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. மேலும் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையையும் முத்துச்செல்வி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.