Hot Posts

6/recent/ticker-posts

சிறுபான்மை மக்கள் தம் வாழ்வை போராட்டத்திலேயே கழித்துக் கொண்டிருக்கிறார்கள்பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏதேச்சதிகார போக்கால்இந்திய நாடு பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறதுஇ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேட்டி

சிறுபான்மை மக்கள் தம் வாழ்வை போராட்டத்திலேயே கழித்துக் கொண்டிருக்கிறார்கள்

பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏதேச்சதிகார போக்கால்
இந்திய நாடு பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது

இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேட்டி

தஞ்சாவூர், செப். 17 -

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாநகரச் செயலாளர் ஜே. ஷரீப் இல்லத் திருமணத்திற்கு 16.09.2021 வியாழனன்று தஞ்சாவூர் வருகை தந்த இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தஞ்சாவூர், கீழவாசல், ஆட்டுமந்தை தெருவிலுள்ள இ.யூ. முஸ்லிம் லீக் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித் தார்.
அப்போது அவர் கூறிய தாவது:

ஒன்றிய பாஜக  அரசில் நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும், எல்லாத் துறைகளையும் தனியார் பண ஒருசில தொழி லதிபர்களுக்கு  தாரைவார்த்து விற்றுவிட்டு, அடித்தட்டு மக்கள் - நடுத்தர வர்க்கத்தினரை எல்லாம் பாதித்து, பெருந் தனக்காரர்களை மட்டும் வாழ வைப்பதற்கு ஏதுவாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டு மானால் அது மசோதாவாக அறிமுகப்படுத் தப்பட வேண்டும். பிறகு அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இப்படியெல்லாம் முறைகள் இருக்க, எதையுமே செய்யாமல் - எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளாக நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கருத்துக் கூற  வாய்ப்பு அளிக்கப்படாத நிலை உள்ளது.
 
எதிர்க் கட்சித் தலைவர்க ளின் தொலைபேசி உரை யாடல்கள் எல்லாம் இஸ்ரேல் உளவுத்துறையின் செயலியைக் கொண்டு ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு தேசிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையிலும், அது குறித்து நாடாளுமன்றத்தில் வாய் திறக்கக் கூட வாய்ப் பளிக்கப்படவில்லை.
நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கெல்லாம் கூட சிறு விவாதமும் நடத்து வதில்லை; உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிப்ப தில்லை என்று கண்ட னம் தெரிவித்து, கடந்த நாடாளு மன்றக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்யும் நிகழ்வும் நடந்திருக்கிறது.
 
விவசாயிகள் தமது வாழ்வாதாரப் பிரச்சினைக்காக பசி, பட்டினியுடன் பல மாதங்களாகப் போராடி வந்து கொண்டிருக்கிற நிலையிலும் கூட, அவர்களை அழைத்து இதுவரை பேசவில்லை. ""அழைத்துப் பேசுங்கள்"" என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல; ஆளும் கட்சியைச் சார்ந்தவரும், வருண் காந்தி போன்றவர்கள் எல்லாம் வலியுறுத்தியும் கூட அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
சுருங்கச் சொன்னால் - இந்தியப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகிய இருவர் மட்டும் தமக்குள் பேசிக் கொண்டு, எதேச்சாதிகாரப் போக்கில் நினைத்ததை எல்லாம் இந்த நாட்டிலே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இவர்களின் சர்வாதிகாரப் போக்கால் நம் நாடு இந்தியா பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
 
இவர்களின் 7 ஆண்டு கால ஆட்சியில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எதிராக ஏராளமான சட்டங்களைக் கொண்டு வந்ததன் காரணமாக, ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்கள் தம் வாழ்வைப் போராட்டத்திலேயே கழித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன் ஒன்றிய அரசு ஏதேனும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் அதை எப்போதாவது ஏதோ ஓரிரு மாநில அரசுகள் எதிர்க்கும் நிலைதான் இருந்தது. ஆனால் நிகழ் ஒன்றிய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு - அதை எதிர்த்தும், கண்டித்தும் இந்த நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
 
குறிப்பாக, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திரா விட முன்னேற்றக் கழக அரசின் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநிலத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி னார். மாநிலத்தின் பல கோடி மக்களிடத்தில் கையெழுத்துக் களைப் பெற்று, அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அவரே போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். ""திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்"" என்று முழங்கினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வகையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானங்களை நிறை வேற்றி, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு உளப்பூர் வமாக - அதிகாரப்பூர்வமாக மதிப்பளித்து உள்ளார்.
 
மொத்தத்தில் சொன் னதைச் செய்து கொண் டிருக்கிறார் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள். பொதுவாக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையில் பலவற்றைக் குறிப்பிடுவது வழமைதான். ஆனால் அவற்றையெல்லாம் சிரமேற் கொண்டு நிறைவேற்றுவதில் பெரும்பாலும் அக்கறை காட்டாது. திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொருத்த வரை - கலைஞர் அவர்களின் காலத்திலும் சரி; இப்பொழுது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களது காலத்திலும் சரி; தகுதியற்றதைச் சொல்லவும் மாட்டார்கள். சொன்னதைச் செய்யாமல் விடவும் மாட்டார்கள். அந்த அடிப்படையில்தான் இப் பொழுது இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின் றன.

தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது பல்வேறு தொழிற்சாலைகள் எல்லாம் மாநிலத்தை விட்டும் வெளியேறக் கூடிய நிலை, புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொழிலதி பர்கள் தயங்கும் நிலை எல்லாம் இருந்தன. ஆனால் இப்போதோ தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு பல்வேறு தொழில் ஒப்பந்தங்களை நிறைவேற்றி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்திருக்கிறது.
 
அதுபோல, நமது மாநிலத் தில் ஓர் ஆட்சி அமைகிறது என்றால் பெரும்பாலும் ஆளும் கட்சியினரை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் வழமையை மாற்றி - ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுகளை எல்லாம் முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, மாநிலத்தின் எல்லா மக்களுக்குமான நல்லரசாக இந்த அரசை நடத்திக் கொண்டிருக்கிறார். இது அவரது பரந்த மனப் பான்மையின் வெளிப்பாடு. இவ்வளவு அழகான முறையில் தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், இந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மை சமுதாய மக்கள் சார்பிலும் நாங்கள் உளமாரப் பாராட்டுகிறோம்.
பொதுவாக ஓர் அரசை ஆளுங்கட்சியினர் தான் பாராட்டிக் கொண்டிருப்பார்கள். மக்க ளில் ஆதரவாளர்கள் மட்டும் தான் பாராட்டிக் கொண் டிருப்பார்கள். ஆனால், தளபதியார் அவர்களின் இந்த அரசை மாநிலத்தின் எல்லாத் தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். எல்லா எதிர்க்கட்சியினரும் பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள். இந்த நல்லாட்சி தமிழக மக்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவாகப் பூர்த்தி செய்ய வேண்டுமென எங்கள் விருப்பத்தை இங்கே நாங்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றோம்.

மேதகு ஆளுநர் அவர்களின் உரையிலும், நடை பெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் மாநில மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை - அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கும் நிலையில், குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் நலனுக்காகவும் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ""ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகள் மீட்டுப் பாதுகாக்கப்படும்; வக்ஃப் வாரிய நிர்வாக நடவடிக்கைகளின் அனைத் துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பரந்து விரிந்த சொந்தக் கட்டிடத்தில் வக்ஃப் வாரிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும்; உலமாக்கள் பணியாளர் நல வாரியத்திற்கு இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கி, அதன் பயன் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய ஆவன செய்யப்படும்"" என்பன போன்ற நல்ல அறிவிப் புகளோடு, எல்லாவற்றுக்கும் மேலாக - ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்று கூறி, பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் மனதில் பால் வார்த்து இருக்கிறார். இவ்வாறு இந்த அறிவிப்புகள் அனைத்தையும் காலப்போக்கில் ஒவ்வொன் றாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எம் சமுதாய மக்களுக்கும், எங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு நிறைவாகவே இருக்கிறது.
 
""பேரறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 700 சிறைவாசிகளை விடுதலை செய்வோம்"" என்று அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. அப்படி விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் அனைத்து சமுதாய மக்களும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். குறிப்பாக 20 ஆண்டுகளைக் கடந்தும் விசாரணைக் கைதி களாகவே சிறைவாசத்தில் இருக்கும் 38 முஸ்லிம்களை இந்தப் பட்டியலில் இணைத்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களை அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
பிரிக்கப்பட்ட மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி தமிழக அரசால் அறிவிக் கப்பட்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகளிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நீண்ட நெடு நாளாக உறவு வைத்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம். இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி வாகை சூடுவதற்காக எமது கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை ஊக்கமுடன் செயல்பட வலியுறுத்தி இருக்கிறோம். அவரவர் பகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள்டன் கலந்து ஆலோசித்து, தேர்தல் வியூகங்களை வகுத்திடவும், கூட்டணியின் வெற்றிக்காக முழு முனைப்புடன் பணியாற்றவும் பணித்து இருக்கின்றோம்.
 
கேள்வி: தமிழகத்தில் 28 இடங்களில் சோதனை நடைபெற்று இருக்கிறதே...? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதை எதையெல்லாம் செய்வதாக மக்களுக்கு தேர்தல் அறிக்கை மூலம்
தி.மு.க. அறிவித்ததை எல்லாம் செய்து கொண் டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒன்றுதான் ""ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"" என்பதுவும். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான வர்கள் மீது விசாரணையைத் துவக்கி இருக்கிறார். ""அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்"" என்றார். அதையும் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். குற்றங்களை யார் செய்திருந்தாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மக்களின் முதல்வர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்.
கேள்வி: கடந்த ஆட்சி யின்போது நீட் தேர்வுக்கு எதிராக இப்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக போராடிக் கொண்டிருந்தார். இப்பொழுதும் அதே நிலைதான் இருக்கிறது?
பதில்:  எடுத்த எடுப்பி லேயே எல்லாம் நடந்து விட வேண்டும் என்று எதிர் பார்க்கக்கூடாது. எதையுமே செய்யத் துவங்கவில்லை என்றால் கேள்வி கேட்கலாம். இப்பொழுதுதான் சட்ட ரீதியான போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தமது அதிகார வரம்புக்குள் நின்று எந்த அளவுக்கு இதைச் செய்து சாதிக்க முடியுமோ நிச்சயம் இந்த அரசு செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த வகையில் நீட் தேர்வுக்கு எதிராகவும் கடைசி வரை போராடி, மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தேவையே இல்லை என்ற நிலையைக் கொண்டு வருவார்.
அதுவரை மாணவச் செல்வங்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்லாமல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று நாங்கள் அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
 
கேள்வி: ஊழல் குற்றச் சாட்டு குறித்த விசாரணையை - எதிர்க்கட்சியினரை பழிவாங் கும் நடவடிக்கை என்ற ரீதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கூறியிருக்கிறாரே...? இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டு சட்டப்படி யார் தவறு செய்தாலும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே சரி. அந்த வகையில், ""ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்"" என்று தளபதியார் சொன்னார். அதை இப்போது செய்து கொண்டிருக்கிறார்.
தண்டனையா தந்துவிட் டார்? விசாரணையைத்தானே துவக்கி இருக்கிறார்? தான் குற்றமற்றவர் என்றால் தைரியமாக விசாரணைக்கு ஒத்துழைப்பு  கொடுக்க வேண்டும்.
விசாரணையே கூடாது என்று சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. இன் னும் குறிப்பிட்டுச் சொல்வ தென்றால் எந்த ஆதாரமும் இல்லாமல் விசாரணை செய்யவில்லை.
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அது சாதாரண மக்களுக்குத் தனியாக, ஆளும் கட்சியினருக்கு இன்னொரு முறையில், எதிர்கட்சியினர் வேறொரு வகையில் என்றெல்லாம் இருக்கக் கூடாது. இந்த நாட்டின் சாதாரண குடிமகன் தவறிழைத்தால் அவருக்கு என்ன சட்டமோ அதே சட்டம்தான் முன்னாள் அமைச்சருக்கும். முன்னாள் அமைச்சர் என்பதற்காக தனிச் சட்டம் என்றெல்லாம் இங்கு எதுவும் இல்லையே?
சேர்த்த சொத்துக்களுக்கு, வைத்துள்ள பணத்திற்கு முறையாகக் கணக்கு காட்ட வேண்டும். தவறி னால் நடவடிக்கை இருக்கத் தான் செய்யும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முறையாகக் கணக்கு காட்டி நிரபராதி என நிரூபிக்க வேண்டும்.எனவே விசாரணைக்கு எதிராகப் பேசுவதை விட, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதே சரியாக இருக்கும்.
திமுக அரசின் இந்த சட்ட நடவடிக்கைகளை எதிர்க் கட்சியினர் எதிர்த்தாலும் மக்கள் நிச்சயமாக வரவேற் பார்கள்.
இவ்வாறு கே.ஏ.எம்.முஹம் மது அபூபக்கர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபுதீன், தஞ்சை மாநகரச் செயலாளர் எம். அபூபக்கர், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் சம்சுதீன், மாநகர துணைச் செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.